0
 முருகன் பேரிலேயே தன் கேரக்டருக்கும் பெயர் வைப்பது அருண் விஜய் ஸ்பெஷல்.  'மாஞ்சா வேலு' , 'மலை மலை', 'தடையறத் தாக்க', 'வா டீல்' என எல்லாப் படங்களிலும் அருண் விஜய் கேரக்டர் முருகன் பெயரில்தான் இருக்கும். அஜித் , கௌதம் மேனனை விட அருண் விஜய் 'என்னை அறிந்தால்' படத்தை பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறார். ஜிம்மே பழியாகக் கிடக்கும் அருண் விஜய்யிடம் பேசினோம்.


''உங்க திறமையை யாரும் கண்டுக்கலைன்னு வருத்தம் இருக்கா?’’
 ‘‘ முன்னாடி இருந்தது. இப்போ இல்ல. யாருமே கண்டுக்கலயேன்னு ஃபீல் பண்ண போதுதான் நிறைய கத்துக்கிட்டேன். அந்த விதத்துல சினிமாவுக்கும், வாய்ப்பு கொடுத்தவங்களுக்கும்,  கொடுக்காதவங்களுக்கும் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்.  சக்சஸ் கொஞ்சம் கொஞ்சமாதான் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இப்படிதான் வரணும்னு கடவுள் எழுதி வெச்சு இருக்காரு . திடீர்னு சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் வரணும்னு எண்ணம் இல்லை.  ஆனா நமக்குனு என்ன இருக்கோ அது வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இப்போ எனக்கான சூழ்நிலைகள் சரியா அமைஞ்சிருக்கு. ஃபேமிலி சப்போர்ட்,  ஃப்ரண்ட்ஸ் சப்போர்ட்னு எல்லாத்தையும் சரிசெய்துக்குற வாய்ப்பை இந்த அனுபவங்கள் கொடுத்தது.  எங்கே டிராவல் பண்றேன்னு எனக்கு நல்லாவே தெரியுது. அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிட்டேன். இப்போ நான் ரியல்லி ஹேப்பி.’’

‘‘ உங்க கெரியர்ல தப்பான படம் பண்ணிட்டோம்னு நெனைச்சதுண்டா?’’
‘‘  தப்பான படங்கள் பண்ணா கெரியர் பாதிக்கும். டி.வி. யில கூட இங்கிலீஷ் சீரியல்கள் பண்றாங்க.  சிபி ஐ சீரிஸ்ல மேக்கிங் அவ்ளோ அழகா இருக்கு. அதை இப்போ அப்படியே தமிழ்ல  டப் பண்றாங்க. டப்பிங் படத்தை விடுங்க. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படத்தை தமிழ் பேசி குக்கிராமத்துல பார்க்குறாங்க. ஜனங்களை யாரும் ஏமாத்த முடியாது. உலக சினிமாவை பார்க்குற மக்கள் தமிழ்நாட்ல இருக்காங்க. அவங்க தெளிவா இருக்காங்க. நல்ல கதையை புதுசா புரியுற மாதிரி சொன்னா மக்கள் ஏத்துப்பாங்க. ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பெஸ்ட் தரணும்னுதான் பண்றேன். நான் ப்ளஸ் டூ முடிச்சு,  காலேஜ் போகும்போதே சினிமாவுக்கு வந்துட்டேன். யாரும் அப்படி வந்தது இல்லை. கார்த்தியும், நானும் ஒரே பேட்ச்.  சூர்யா சீனியர். ஆனா அவர் ஃப்ரெஷ்ஷா வந்த மாதிரி இருக்கு. சீக்கிரம் வந்ததால எனக்கு மெச்சூரிட்டி லெவல் இல்லை. அப்பவும் ஒரு படம் முடிச்சுதான் அடுத்த படம் பண்ணேன்.  கொஞ்சம் கேப் விட்டேன். அதை அனுபவமாதான் எடுத்துக்குறேன்.இப்போ பக்குவம் ஆகிட்டேன். தப்பான படங்கள் பண்ண மாதிரி இல்லை. யோசிச்சா 18 படங்கள்ல ரெண்டு படங்கள் தப்பான படங்களா இருக்கலாம். ஆனா, பேர் சொல்லக்கூடிய படங்கள் இருக்கு. நான் கமிட் ஆன படங்கள் எதுவும் பூஜை போட்டதோட நிக்கலை. பெட்டியில தூங்கலை. எல்லாம் ரிலீஸ் ஆகிடுச்சு. . டப் பண்ணாமயே ஒரு படம் இன்னொருத்தர் டப் பண்ணி வெளிய வந்துச்சு. இனிமே அந்த தவறுகள் கூட நடக்காது. 'ஜென்டில்மேன்' எடுக்கும்போது ஷங்கர் சார் 'எந்திரன்' எடுப்பார்னு தெரியாது. அந்த ஃபயரைக் கண்டுபிடிச்சது குஞ்சுமோன்தான். 'என்னை அரிந்தால்' என்னோட ஸ்டார்ட். நான் நிறைய பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு. அதுக்கு என் படங்கள் பதில் சொல்லும். அஜித், விஜய், விக்ரம், சூர்யா லிஸ்ட்ல சீக்கிரம் நானும் இருப்பேன். அதுக்கான அங்கீகாரம் சீக்கிரமே கிடைச்சிடும்.’’

‘‘பார்ட்டிக்குப் போற பழக்கம் இருக்கா?’’
‘‘ நான் கொஞ்சம் ஹெல்த் கான்சியஸோட இருக்குறவன். பிசிக்கல்ல கவனம் செலுத்தணும்னு சில விஷயங்கள்ல ஒதுங்கி நிப்பேன். ஒரே விஷயத்தைப் பண்ணிக்கிட்டே இருந்தா போரா இருக்கும்.அதனால வேற டைப்ல எக்சர்சைஸ் மாத்திட்டேன். டயட் , சார்ட்னு  தினமும் பல மணிநேரம் ஜிம்ல பழியா கிடக்குறேன். எம்.ஜி.,ஆர் சாரை சூப்பர் பிசிக்னு சொல்வாங்க. என் அப்பா நல்ல பிசிக் வெச்சு இருந்ததால எனக்கு ஈர்ப்பு இருந்தது. இப்போ இருக்குற ஹீரோக்கள் எல்லாரும் பிசிக்ல கவனம் செலுத்துறது சந்தோஷமா இருக்கு. இண்டஸ்ட்ரியில முதல்ல சிக்ஸ்பேக் வெச்சது நான் தான். ‘ஜனனம்’ படத்துல சிக்ஸ்பேக் பண்ணேன். 'தடையறத் தாக்க' படத்துக்காக சிக்ஸ்பேக்ல ரெடியானேன். ஆனா தேவைப்படலை. ஆனா இவ்ளோ வொர்க் அவுட் பண்ணியிருக்கேன். அதைக்  காட்டியே ஆகணும்னு கிளைமாக்ஸ்ல சட்டையை கிழிச்சிருந்தா பக்கா சினிமாத்தனமா இருந்திருக்கும். சம்பந்தம் இல்லாம நான் எதையும் பண்ணமாட்டேன். ’’

‘‘ வாரிசு நடிகர்ங்கிறது பிளஸ்ஸா? மைனஸா? ’’
‘‘ நானும் சூர்யாவும் ஜிம்னாஸ்டிக், ஸ்டன்ட் கிளாஸ் ஒண்ணா போயிருக்கோம். 'எப்படி இப்படில்லாம் காலைத் தூக்குறே'ன்னு சூர்யா  பாராட்டுவார். இப்போ ஆச்சர்யமா வளர்ந்து நிக்குறார் . அவரோட உழைப்பைப்  பாராட்டியே ஆகணும். நான்தானே ஃபீல்டுக்கு முன்னாடி வந்தேன், என்னைவிட சூர்யா  நல்லா பண்றார்னே நான் நினைக்கலை.  சக நடிகனாகவும், சினிமா துறையில வாரிசாவும் சூர்யா வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படறேன்.  அவர் ஜெயிச்சது இன்னொரு வாரிசா நான் ஜெயிச்ச மாதிரி இருக்கு.  இப்போ விக்ரம் பிரபு அசத்துறார். . டாக்டர் பையன் டாக்டர் ஆகுற மாதிரி நடிகர் பையன் நடிகர் ஆகுறான். இதுல எந்தத் தப்பும் இல்லை. ஹெல்த்தியான விஷயம்தான். இது ரத்தத்துலயே இருக்குற விஷயம். ஆனா வந்துடுவோம்னு சும்மா இருக்காம, கனவு காணாம நிறைய உழைக்கணும். டெடிகேட் பண்ணணும். கஷ்டப்படணும். என்ட்ரி ஈஸியா இருக்கலாம் .ஆனா, சக்சஸ் கஷ்டம். நடிகர் மகன் மைனஸ் இருக்கு. என்னப்பா அவர் பையன்னு சாதாரணமா சொல்லிடுவாங்க., ஆனா சூழல், வளர்ப்பு வேற ...  இப்போ பங்ஷன் போனா முதல் ரோல இருக்கேன். ஆனா சில வருஷங்களுக்கு முன்னே இதே பங்க்ஷன்ல  ஹீரோவா இருக்கும்போதே ஆறாவது, ஏழாவது ரோவுல உட்கார்ந்திருக்கேன். ஆரம்பத்துல முதல் ரோ போய் அப்புறம் கடைசி ரோ  போயிருந்தா பயங்கர அடியா இருக்கும். நிறைய பேர் அப்படி ஆகும்போதுதான் நொறுங்கிப்போய்டறாங்க. வாரிசு நடிகர்கள். புதுசா வர்றவங்க ஜெயிக்க முடியலை. இவங்க ஜெயிக்குறாங்கன்னு ஃபீல் பண்ண வேணாம். உங்களால முடியும்னு உழைச்சா போதும்,. கண்டிப்பா சக்சஸ் கிடைக்கும்.

‘‘ டைரக்டர் ஹரி உங்க மாமாவாச்சே.  எனக்காக ஒரு படம் பண்ணித்தாங்கன்னு அன்புக் கட்டளை போடலாமே? ’’
 ‘‘ புரொஃபஷன் வேற., ரிலேஷின்ஷிப் வேற. நான் ஹரி மாமான்னு தான் கூப்பிடுவேன். அந்த ரிலேஷன்ஷிப்பைதான் பெருசா மதிக்குறேன். அவங்க வீட்லயே ஒரு டைரக்டர் இருக்காருன்னு மத்தவங்க நினைக்கலாம். அவர் தன்னை நிரூபிச்சுதான் வந்திருக்காரு. நானும் என்னை நிரூபிப்பேன்.  'அவங்க வீட்ல இருக்குற டைரக்டரே படம் பண்ணலை'ன்னு சொல்றது  எனக்கு மைனஸ்தான். இந்தக் கேரக்டரை அருண் பண்ணா நல்லா இருக்கும்னு தோணும்போது அவரா வருவார். நடிப்போம். ஹரி மாமா எனக்குப் படம் பண்ணனும்னு  கட்டாயம் கிடையாது.  நிறைய நண்பர்கள் அவர்கிட்ட போய் கேட்குறதா சொல்லி இருக்காங்க . வேண்டாம்  ப்ளீஸ்.  சீக்கிரமாவே அவரே என்னைத் தேடி வருவார்னு சொல்லியிருக்கேன். நிச்சயம் இது நடக்கும்.  ’’

Post a Comment

 
Top